Thursday 23 February 2012

நான் காந்தி !!!


நான் காந்தி !!!



ஹவுரா ஸ்டேஷனிலிருந்து சென்னைக்கு குடும்பமாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். இரண்டு வயதே ஆன எனது மகன் இரயில் பெட்டிக்குள் அங்கும் இங்கும் ஓடி ஓடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தான். அவனது சேட்டைகளும், குறும்புகளும் அங்கிருந்தவர்களுக்கு ரசனையாகிக்கொண்டிருந்தன. பலர் எங்களிடம் பேசிப் பழகுவதற்கு எங்களது மகனின் நடவடிக்கைகள் காரணங்களாயமைந்தன. அப்பொழுது ரயில் ஒரிசா மாநிலத்தினுள் பயணித்துக்கொண்டிருந்தது. மாலை நேரத்தில் ஒரிசா மாநிலத்திலுள்ள ஓர் இரயில் நிலையத்தில் ரயில் நின்றது. இரயில் நின்றதும் பயணிகள் அங்கும் இங்கும் இறங்கி பொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டிக்கொண்டிருந்தனர். இரவு நேர உணவை இரயில் பிளாட்பாரத்தில் வியாபாரிகள் பலர் கூவிக் கூவி விற்றுகொண்டிருந்தனர். சுமார் ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் இரயில் புறப்படத் தொடங்கியது. அப்போது நாங்கள் அமர்ந்திருந்த பெட்டியில், எங்கள் இருக்கையின் எதிர் இருக்கையில் புதிதாக அந்த நிலையத்தில் ஏறிய ஒரு பெண் வந்து அமர்ந்தார். ஏறக்குறைய நாற்பத்திரண்டு வயதிற்கான தோற்றம்ளூ சுடிதார் உடை, கையிலே ஒரு சிறிய அலுவலகம் செல்லும் பெண்களுக்கான கைப்பை. ஏறிய அப்பெண் எதிர் இருக்கையில் உட்கார்ந்ததும், உணவு பரிமாறும் ஒரு மனிதனை அழைத்தார்ளூ ஏதேதோ வேகமாக பேசினார். ஹிந்தி மொழியினை நான் அறிந்தவன் என்றபோதிலும் அவர்களது வேகமான உரையாடல்களை எனது காதுகள் உற்றுக்கவனிக்க இயலாத நிலை. சற்று நேரத்திற்கெல்லாம் அந்தப் பெண்ணுக்கு ஒரு கப்-ல் டீ கொண்டு வந்து தரப்பட்டது. அதற்கு அவர் எந்தப் பணமும் செலுத்தவில்லை. ஒருவேளை கடைசியாகக் கொடுப்பார் என நான் அதனை பொருட்படுத்தவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் எனது மகனின் விறுவிறுப்பான குறும்புகள் அவரையும் எங்களிடம் பேசவைத்தது. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ற அந்தப் பெண்ணின் சுருக்கமான கேள்விக்கு எங்களது உத்தரைவைச் சொல்லி முடித்தபின்னர், நாங்கள் கேட்காமலேயே தன்னை யார் என்று அவர் அறிமுகப்படுத்தினார். தான் இரயில்வேயில் பணி செய்வதாகவும், இரயிலில் கொடுக்கப்படும் உணவுகளை பரிசோதிப்பது தனது கடமை எனவும், தான் பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உணவுளைக் கண்காணிக்கும் பரிசோதகர் எனவும் அவர் அறிமுகம் செய்துகொண்டார். பயணிகளுக்குக் கொடுக்கப்படும் உணவினை பரிசோதிக்கவேண்டியவருக்கு, விசேஷித்த உணவு லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதை அப்போது நாங்கள் உணர்ந்துகொண்டோம். 

அப்போது காய்ந்துபோய்க் கிடந்த எங்கள் காட்டிலும் மழை பெய்தது. எனது மகன் டீ வேண்டும் என கேட்களூ நான் டீக்காரனைக் கூப்பிட விழைந்தேன். உடனே அவர் 'ஆப் ருக்கியே மை புலாத்தாஹு'  (பொறுங்கள் நான் கூப்பிடுகின்றேன்) என்று அவரே கூப்பிட்டு டீ கொண்டுவரச் சொன்னார். அதனைக் குடித்த எங்களுக்கு அதிர்ச்சி அத்தனை நலமாகப் போடப்பட்டிருந்தது அந்த டீ. வெண்ணீருக்கு ஐந்து ருபாய் கொடுத்து தொண்டையை ஏமாற்றிக்கொண்டு வந்த எங்களுக்கு சந்தோஷமாயிருந்தபோதிலும், ஏன் இந்த நிலை என நினைக்குங்கால் சங்கடமாகவும் இருந்தது. ஒரே இரயிலில் பயணிகளுக்கு வேறு பரிசோதகர்களுக்கு வேறா? இத்தனை பாரபட்சம் ஏன்? மற்ற பயணிகளும் மனிதர்கள் தானே! என்ற நினைவலை என்னில் ஓடத்தொடங்கியபோதுளூ எனக்கு நினைவு வந்தது காந்தியின் தென் ஆப்பிரிக்க இரயில் பயணம். 

No comments:

Post a Comment